நோபல் பரிசு பெற்ற நாவல் களில் ஒரு சிலவே தமிழில் மொழியாக்கம் செய்யப் பட்டுள்ளன. அதில் சுவீடன் நாவ லாசிரியை செல்மா லாகர்லெவ் எழுதிய ‘மதகுரு’ என்ற நாவல் மகத்தானது.
1909-ல் செல்மா லாகர்லெவ்வுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது. கெஸ்டா பெரிலிங் ஸாகா என்ற இந்தப் புகழ்பெற்ற நாவலை ‘மதகுரு’ எனத் தமிழில் க.நா.சு மொழியாக்கம் செய்திருக்கிறார். மருதா பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது. ‘கெஸ்டா பெரிலிங் ஸாகா’ ஹாலிவுட் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது.
உலக இலக்கியத்தில் ஷேக்ஸ் பியருக்கும் கிரேக்க காவியங்களான ‘இலியட் ஒடிஸி’க்கும் இணையாக ‘மதகுரு’ நாவலைச் சொல்வேன் என்கிறார் க.நா.சு. இதன் பூரணத்துவம் நாவலை தனியொரு சிகரமாக உயர்த்துகிறது. தஸ்தாயேவ்ஸ்கியின் ‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவலை இலக்கியத்தின் சிகரம் என்பார்கள். அதற்கு நிகரானது ‘மதகுரு’. ‘இதுபோன்ற காவியத்தன்மை கொண்ட நாவல் இதுநாள் வரை எழுதப்படவில்லை’ என வியந்து சொல்கிறார் க.நா.சு.
மதகுருவான கெஸ்டா பெரிலிங்கின் கதையை விவரிக்கிறது நாவல். அளவுக்கு மீறி குடித்துவிட்டு தேவா லயத்தில் முறையாக பிரசங்கம் செய்யாமல், நடத்தை கெட்டுத் திரியும் கெஸ்டா பெரிலிங்கை விசாரணை செய் வதற்காக தலைமை மதகுருவும் மதிப்புக் குரிய மற்ற குருமார்களும் வருவதில் இருந்து நாவல் தொடங்குகிறது.
‘தன்னை விசாரணை செய்ய அவர் கள் யார்?’ எனக் கோபம் கொள்ளும் கெஸ்டா பெரிலிங் அன்று மிக அற்புதமாக தேவாலயத்தில் பிரசங்கம் செய்கிறான். ‘இவ்வளவு திறமை வாய்ந்தவன் மீது எதற்காக இத்தனை குற்றச்சாட்டுகள்?’ என தலைமை மதகுரு குழம்பிப் போய்விடுகிறார். பாவம் அவரும் மனிதன்தானே என மன்னித்து விடுகிறார்கள். அவர்கள் ஊர் திரும்பும்போது வண்டியைக் குடை சாய வைத்து துரத்துகிறான் கெஸ்டா பெரிலிங். இப்படி ஒரு பக்கம் அன்பின் வெளிச்சத்தையும், மறுபக்கம் தீமையின் இருட்டையும் ஒன் றாகக் கொண்டவனாக கெஸ்டா பெரிலிங் அறிமுகமாகிறான். நாவல் இலக்கியத் தில் கெஸ்டா பெரிலிங் மறக்கமுடியாத கதாபாத்திரம். ஸிண்ட்ராம் என்ற கதாபாத் திரத்தை சைத்தானின் பிரதிநிதி போலவே செல்மா உருவாக்கியிருக்கிறார்.
‘தன்னை குடிகாரன் எனக் குற்றம் சாட்டும் திருச்சபை, மதகுருவின் வீடு பாசி பிடித்து ஒழுகுவதையோ, தனிமையில் வறுமையில் வாடுவதைப் பற்றியோ அறிய ஏன் ஆர்வம் காட்டவே யில்லை?’ என கெஸ்டா தனக்குள் குமுறுகிறான்.
‘‘குடிகார மக்களுக்குக் குடிகார மதகுரு இருப்பதில் என்ன தவறு?’’ என்று கேட்கிறான். ஆனால், விசாரணை குருமார்கள் வந்த நாளில் இதுதான் தனது கடைசிப் பிரசங்கம் என உணர்ந்த வுடன் அவன் மனம் மாறிவிடுகிறது.
மனிதனுடன் பழகிய புறாக்களைப் போல உயர்ந்த சிந்தனைகள் அவன் வார்த்தைகளில் தானே வந்து சிக்கிக் கொண்டன. உள்ளத்தில் எரியும் உணர்ச்சிகளை அழகிய வார்த்தைகளாக உருமாற்றினான். கண்ணில் நீர் மல்க கடவுளிடம் பிரார்த்தனை செய்தான். அவனது உரையைக் கண்டு சபை வியந்துபோகிறது.
தேவாலயத்தில் இருந்து வெளி யேறும் கெஸ்டா ஒரு சிறுமியை ஏமாற்றி மாவு வண்டியைக் கைப்பற்றுகிறான். அதை விற்றுக் குடிக்கிறான். வாம்லேண் டின் பணக்காரியான ஏக்பி சீமாட்டியின் ‘உல்லாசப் புருஷர்கள்’ குழுவில் இணைந்து செயல்படுகிறான். அங்கே நடைபெறும் கிறிஸ்துமஸ் விருந்து மிக விரிவாக எழுதப்பட்டுள்ளது.
மேரியான் ஸிங்க்ளேர், அன்னா ஸ்டார்ண்யாக் என்ற இரண்டு பெண்கள் அவனைக் காதலிக்கிறார்கள். ஆனால் அவன் எலிசபெத் டோனா என்பவளைத் திருமணம் செய்துகொள்கிறான்.
குடிகாரன் என்று விரட்டப்பட்ட கெஸ்டா மெல்ல மனமாற்றம் கொள்ள ஆரம்பிக்கிறான். துறவியைப் போல எதற்கும் ஆசைப்படாமல் வாழ தொடங்குகிறான். ‘நான் இறந்த பிறகு என்னை இரண்டு ஏழைகள் நினைவில் வைத்திருந்தால்கூட போதும். நான் ஏதாவது ஒரு தோட்டத்தில் இரண்டு ஆப்பிள் மரங்களை நட்டு வளர்த்துவிட்டு போனால் போதும்; வயலின் வாசிப் பவனுக்கு இரண்டு புதுப் பாட்டுகள் கற்றுக்கொடுத்துவிட்டால்கூட போதும். மற்றபடியே புகழோ, பெருமைகளோ எதையும் நான் வேண்டவில்லை’ என நாவலின் முடிவில் கெஸ்டா சொல்லும்போது, அவன் காவிய நாயகன் போல உருமாறுகிறான்.
பைபிள் கதைகளின் சாயலில் எழுதப்பட்ட ‘மதகுரு’ நாவல் அதன் கவித்துவ வர்ணனைகளுக்காகவும் சிறந்த கதை சொல்லும் முறைக்காகவும் மிகவும் புகழ்பெற்றது.
‘டோவர் சூனியக்காரி’ என்ற அத்தியாயத்தில் மாமிசம் கேட்டு வரும் சூனியக்காரியை விரட்டும் சீமாட்டி மார்பா, ‘உனக்குத் தருவதைவிடவும் மாக்பைப் பறவைகளுக்குத் தந்து விடுவேன்’ எனக் கத்துகிறாள். இதைக் கேட்டு கோபம் அடைந்த சூனியக் காரி ‘மாக்பைப் பறவைகள் உன்னைக் கொத்திக் கொல்லட்டும்’ என சாபமிடு கிறாள். மறுநிமிஷம் ஆயிரக்கணக்கானப் பறவைகள் அவளை கொல்லப் பறந்துவருகின்றன.
வானமே மூடிவிட்டது போல பறவை கள் ஒன்றுகூடுகின்றன. பறந்து தாக்கி அவளது முகத்தையும் தோள் பட்டையையும் பிறாண்டுகின்றன. அவள் அலறியபடியே ஓடிப் போய் கதவை மூடிக்கொள்கிறாள். அன்று முதல் அவளால் வீட்டை விட்டு வெளியே போக முடியவில்லை. வீட்டின் இண்டு இடுக்கு விடாமல் மூடியிருக்க வேண்டிய கட்டாயம் உருவானது. பறவைகளின் தாக்குதலில் இருந்து தப்ப முடியாத தனது விதியை எண்ணி அவள் அழுதாள். ‘தற்பெருமைக்கானத் தண்டனை இப்படித்தான் அமையும்’ என முடிகிறது அந்த அத்தியாயம். இதை வாசிக்கும்போது ஆல்ஃப்ரட் ஹிட்ச் காக்கின் ‘பேர்ட்ஸ்’ படம் நினைவில் வந்துபோனது. இந்தப் படம் வெளிவருவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டுள்ளது இந்த நாவல்.
செல்மா லாகர்லெவ் 1958-ம் ஆண்டு வாம்லேண்ட் என்கிற இடத்தில் பிறந்தார். இளம்பிள்ளை வாதம் தாக்கியவர் என்பதால் சிறுவயது முழுவதும் வீட்டுக்குள்ளும் மருத்துவமனைகளிலும் அடைந்து கிடந்தார். பின்பு ஆசிரியர் பயிற்சி பெற்று, பள்ளி ஆசிரியராக பணியாற்றினார். அவரது ‘மதகுரு’ நாவ லுக்கு அடிப்படை வாம்லேண்ட் பகுதியில் அரை நூற்றாண்டுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவமே. அவருடைய பாட்டி அதைப் பற்றி சொல்லியதில் இருந்து, தான் உத்வேகம் பெற்று எழுதியதாக கூறுகிறார் செல்மா லாகர்லெவ்.
‘மதகுரு’ பைபிளின் மொழி போல கவித்துவமாக எழுதப்பட்ட நாவல். அதில் நாடோடி கதைகளும் புராணீகத்தன்மையும் ஊடுகலந்துள்ளன என்கிறார் விமர்சகர் பிராங்.
கெஸ்டாவைப் பற்றி விவரிக்கும் சம்பவக் கோவைப் போலவே நாவல் வடிவம் கொண்டிருக்கிறது. 38 கதைகள் ஒன்றுசேர்த்து ஒரே சரடில் கோக்க பட்டிருப்பது போலவே நாவல் உருவாக்க பட்டுள்ளது. ஒரு பிரசங்கத்தில் தொடங் கும் நாவல் ஏக்பி சீமாட்டியின் ‘உல்லாச புருஷர்’களுக்கு கெஸ்டா செய்யும் பிரசங்கத்துடன் நிறைவுபெறுகிறது. இதன் ஊடே வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்துகொள்கிறான் கெஸ்டா.
‘கெஸ்டா பெரிலிங் ஸாகாவைப் படித்து அனுபவிப்பவர்கள் பாக்கியசாலி கள்’ என முன்னுரையில் க.நா.சு கூறு கிறார். அது மறுக்கமுடியாத உண்மை!
நன்றி – இந்து தமிழ் திசை

Compact DICTIONARY Spl Edition
30 நாள் 30 சுவை
18வது அட்சக்கோடு
5000 பொது அறிவு
Mother
21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்
2600 + வேதியியல் குவிஸ்
Caste and Religion
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
Arya Maya (THE ARYAN ILLUSION)
1975
27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள் அற்புத மந்திரங்கள்
One Hundred Sangam - Love Poems
2400 + Chemistry Quiz
2700 + Biology Quiz
2800 + Physics Quiz
மயானத்தில் நிற்கும் மரம்
மத்தி
3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 1)
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 2)
பேய்த்திணை 
Reviews
There are no reviews yet.