Deivam enbathor
அடிப்படையில் பெரியாரியவாதியான தொ.பா, நாட்டார் தெய்வங்களையும் தமிழ்நாட்டு வைணவத்தையும் முன்னிறுத்திப் பேசுவதற்கான நியாயங்கள் வலுவானவை. பெரியாரிய மார்க்சியச் சிந்தனைகளோடு அவற்றை இணைக்கும் அவரது கண்ணோட்டம் மிக முக்கியமானது. நாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாட்சி நம் மனங்களில் சாமியாட்டம், குருதிப்பலி, பலி வடிவங்கள் ஆகிய படங்களாகவே மூட நம்பிக்கைகளோடு பின்னிப் பிணைந்தவையாக விரிந்துகிடப்பது உண்மை. ஆனால், அவை முற்றிலும் தவறான பிம்பங்கள் என்று அழுத்தமாகத் தன் கருத்துக்களை வாசகர் உணரும் விதமாக இந்நூலின் கட்டுரைகள் எடுத்துரைக்கின்றன. வட்டாரம் சார்ந்த உற்பத்தி அசைவுகளும் சமூக உளவியலும் எனப் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் நாட்டார் தெய்வங்கள் ஒரு மக்கள் பண்பாட்டின் அடையாளமாக நிற்கின்றன. ஆகவேதான் தமிழ் மக்களின் இருத்தலுக்கும் கண்ணியமான வாழ்வுக்குமான போராட்டமாகவே தன் வாழ்வை அமைத்துக்கொண்ட தந்தை பெரியார், நாட்டார் தெய்வங்களை எதிர்கொள்ளாமல் அதிகார மையமாகிய கோவில்களையும் பெருந்தய்வங்களையும் அதனை மையப்படுத்திய மனித ஏற்றத்தாழ்வுகளையுமே எதிர்த்தார். பெருந்தெய்வங்கள் நம்பிக்கை சார்ந்தவை என்றும் நாட்டார் வழிபாட்டு முறைகளில் மூட நம்பிக்கை படிந்து கிடக்கிறதே என்றும் வாதிடுவோர்க்கு, தொ.ப முன்வைக்கும் கேள்வி ஆகச் சரியான பதிலாக அமைகிறது. “நம்பிக்கைகளுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் இடையே என்ன இருக்கிறது? ஏதோ ஒரு கையில் நுண் அரசியல் அதிகாரமும் சமூக அதிகாரமும்தானே இருக்கின்றன?”
Reviews
There are no reviews yet.